ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம் பாளையத்தில் கோழி அபிவிருத்தி திட்டம் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 400 பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டு கோழி குஞ்சுகளும், 50 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகளும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு கோழிகளையும், கறவை மாடுகளையும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் முதலமைச்சர் தேர்தலுக்கு முன்னரே விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளார். 15 நாள்களில் அதற்கான ரசீது வழங்கவும் ஆணை பிறப்பித்துள்ளார். விவசாயக் கடன் தள்ளுபடியில் தமிழ்நாட்டிலேயே கூடுதலாக பயனடைந்த மாவட்டம் ஈரோடுதான். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குறைந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளை நூலகங்களாக அமைப்பது குறித்து இன்னும் அரசு பரிசீலிக்கவில்லை. பத்துக்கும் குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித் தொலைக்காட்சி மூலம் பயின்ற மாணவர்களின் கல்வித் தரத்தை ஆய்வுசெய்ய திறனாய்வுத் தேர்விற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.