சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடமிருந்து குழு கடன் பெற்றுள்ளனர்.
இந்தக் கடனை கூலித் தொழிலாளர்கள் வாராவாரம் செலுத்தி வந்த நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது வேலை இழந்துள்ளதால் பெண்கள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் மாத இறுதிவரை மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், வங்கிகள் கடன் வசூல் செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை பவானிசாகர் அருகே நால்ரோடு கிராமத்தில் தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் இருவர் இன்று கடன் வசூலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியரை சிறைபிடித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக பவானிசாகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி கடன் வசூல் செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, காவல்துறையினர் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்களிடம் தற்காலிகமாக கடன் வசூல் செய்வதை நிறுத்தி வைக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.