ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் யானை, மான், சிறுத்தை, பன்றி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த வனத்தை ஒட்டி கரும்பு, வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
உணவுக்காக வன விலங்குகள், விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் தோட்டத்தை சுற்றி விவசாயிகள் கம்பி வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு (மே.20) கொங்கர்பாளையத்தில் கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான விவசாய தோட்டத்தில் 35 வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்று புகுந்துள்ளது, அப்போது அங்கு போடப்பட்ட மின் வேலியில் சிக்கி அந்த ஆண் யானை அதே இடத்தில் உயிரிழந்தது.
இச்சம்வவம் குறித்து தகவலறிந்து வந்த டி.என்.பாளையம் வனத்துறையினர், யானை உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த யானையை உடற்கூராய்வு செய்ய சத்தியமங்கலம் புலிகள் காப்பக மருத்துவர் அசோகன் வரவழைக்கப்பட்திருந்தார்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆண் யானை இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் தோட்டத்தை யானைகள் சேதபடுத்தக் கூடாது என்பதற்க்காக தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள மின் வேலியில், உயர் மின்னழுத்தம் போடப்பட்திருந்தும், அதனால் யானை உயிரிழந்ததும் தெரியவந்ததது.
வனத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள அகழி மழையினால் சேதமடைந்து பராமரிப்பில்லாமல் காட்டு விலங்குகள் எளிதாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுவதாகவும் அதனை சரி செய்ய வேண்டும் என வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.