தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூட நம்பிக்கையின் உச்சம்: ஜோதிடரின் பேச்சை கேட்டு கர்ப்பிணியை உதைத்த கணவர்...! கலைந்தது கரு...! - மனைவியின் வயிற்றில் உதைத்த கணவர்

ஈரோடு: அம்மாபேட்டை அருகே குழந்தை பிறந்தால் உயிருக்கு ஆபத்து என ஜோதிடர் கூறியதால் கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்து கருவை கலைத்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பிணியை எட்டி உதைத்த கணவர்
கர்ப்பிணியை எட்டி உதைத்த கணவர்

By

Published : May 27, 2020, 3:20 PM IST

Updated : May 27, 2020, 3:48 PM IST

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள முளியனூரைச் சேர்ந்தவர் முனுசாமி (32). தொப்பபாளையத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகள் ரம்யா (25). இவருக்கும், முனுசாமிக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கட்டட தொழிலாளிகளான இவர்களுக்கு சுகதீஸ்வரன் (5) என்ற ஆண் குழந்தை உள்ளது.

முனுசாமிக்கும், ரம்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால், ரம்யா தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதையடுத்து ரம்யாவின் பெற்றோர் அவரை சமாதானம் செய்து, கணவர் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். மீண்டும் கணவருடன் வசித்துவந்த நிலையில், ரம்யா கர்ப்பமாகினார். இது குறித்து முனுசாமி ஜோதிடம் பார்க்கச் சென்றபோது, ரம்யாவுக்கு 2ஆவது குழந்தை பிறந்தால் முனுசாமியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜோதிடர் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த முனுசாமி, கருவை கலைக்குமாறு மனைவியிடம் கூறினார். ஆனால், அதற்கு ரம்யா மறுப்பு தெரிவித்தார்.

இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு முற்றியது. பின்னர், மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த முனுசாமி, மீண்டும் கருவை கலைக்குமாறு மனைவியிடம் கூறினார். ஆனால், தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த முனுசாமி, ரம்யாவை அடித்து துன்புறுத்தினார். தொடர்ந்து, அவருடைய கழுத்தில் இருந்த தாலி கயிற்றை இழுத்துக்கொண்டு, காலால் கர்ப்பிணியை எட்டி உதைத்துள்ளார். இதில், ரம்யா வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

சத்தம்கேட்ட அக்கம்பக்கத்தினர், முனுசாமியிடமிருந்து ரம்யாவை மீட்டு அவரது தாய் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையே வீட்டிலிருந்த முனுசாமி தப்பியோடிவிட்டார். தாய் வீட்டில் தங்கியிருந்த ரம்யாவுக்கு கடந்த மே மாதம் 22ஆம் தேதி திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக குருவரெட்டியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு ரம்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வயிற்றில் வளர்ந்த கரு முனுசாமி எட்டி உதைத்ததில் கலைந்துவிட்டதாக கூறினர்.

இது குறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ரம்யா புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் முனுசாமியை தேடிவருகின்றனர். தொழில்நுட்ப உதவியின் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தையின் அசைவுகளைக் காண துடிக்கும் பெற்றோர் மத்தியில், மூட நம்பிக்கைகளை விதைக்கும் ஜோதிடரின் பேச்சைக் கேட்டு வயிற்றில் இருக்கும் கருவை கலைத்த சம்பவம் வேதனையளிப்பதாக உள்ளது.

இதையும் படிங்க: காவல் துறை வாகனத்தில் பிறந்த குழந்தை: தாயும்-சேயும் நலம்!

Last Updated : May 27, 2020, 3:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details