ஈரோடு:அதிமுகவைச் சேர்ந்த தங்கமணி கடந்த ஆட்சியில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தபோது அதிக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தங்க மணியின் வீட்டில் இன்று (டிசம்பர் 15) காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
அதேபோல் அவருக்குச் சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. சென்னை, நாமக்கல், ஈரோடு, கோவை உள்பட மொத்தம் 69 இடங்களில் சோதனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதன் வரிசையில் கோபிசெட்டிபாளையத்தில், தங்கமணி பங்குதாரராக உள்ள இன்ப்ரா புளூ மெட்டல் பங்குதாரர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்துள்ளனர்.
அதன்படி கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள தயிர்பாளையம், பெரியபுலியூர் பகுதிகளில் இன்ப்ரா புளூ மெட்டல் நிறுவன பங்குதாரர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.