ஈரோடு: தொழிற்சாலைகளிடமிருந்து சுற்றுச்சூழல் இழப்பீட்டுத் தொகையாக, ரூ.1 கோடியே 35 லட்சம் வசூலித்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பவானி, காவிரி ஆற்று நீர் தொடர்ந்து மாசடைந்து வருவதாகக் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக வழக்குப் பதிவு செய்து, நீரை மாசிலிருந்து பாதுகாத்திடவும், நீரின் தரத்தை உயர்த்துவதற்குமான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர், மாசுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுவினர் நீர் நிலைப் பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு, கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுத்துவந்தனர்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இணங்க ஈரோடு மாவட்ட உயர்மட்டக் குழுவினர், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அலுவலர்கள் குழுவினர் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட காவிரி ஆறு, பவானி, பிச்சைக்காரன்பள்ளம் ஓடை, வைராபாளையம் குப்பைக்கிடங்கு பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.