தமிழ்நாடு

tamil nadu

‘கரோனா தொற்றோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்’ - மாவட்ட ஆட்சியர் கதிரவன்!

By

Published : May 23, 2020, 11:00 PM IST

ஈரோடு: கரோனா தொற்றோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளதால் முன்பு போல் தீவிரமான கட்டுப்பாடுகள் இருக்காது என மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் கதிரவன்
மாவட்ட ஆட்சியர் கதிரவன்

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதியோர், கணவனை இழந்தவர்களுக்கு உதவித்தொகைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறுவையில், “37 நாள்களுக்குப் பிறகு நேற்று (மே 22) ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மஹாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டவர் மகன், சமீபத்தில் சென்னையிலிருந்து ஊர் திரும்பியதால் அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

மேலும், கரோனா கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை முன்புபோல் இல்லாமல் தற்போது பாதிக்கப்பட்டவரின் வீடு, சுற்றியுள்ள நான்கு வீடுகள் மட்டுமே தனிமைப்படுத்தப்படும். பெரிய அளவில் கட்டுப்பாடுகள் முன்பைப்போல் இருக்காது. குறிப்பிட்ட அந்த வீட்டை மட்டுமே கண்காணிக்கப்படும். அந்த வீட்டிற்கு மட்டும் வெளிநபர்கள் செல்ல தடை விதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும், பேசிய அவர் கூறியதாவது, “இந்த மூன்று நாள்களாக வடமாநில தொழிலாளர்கள் சுமார் 5ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது ஒடிசா, மேற்கு வங்காளத்தில் புயல் பாதிப்பு இருப்பதன் காரணமாக அங்கு செல்லக்கூடிய தொழிலாளர்கள் மட்டும் அனுப்பப்படவில்லை. பிகார் செல்லக்கூடிய தொழிலாளர்களை தற்போது தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

பெரிய துணிக்கடைகள், நகைக் கடைகள் இன்று முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 50 விழுக்காடு தொழிலாளர்களை மட்டுமே வைத்து கடை நடத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளதால் முன்பு போல் தீவிரமான கட்டுப்பாடுகள் இருக்காது” என்றார்.

இதையும் படிங்க: ஆட்சியரிடம் கரோனா நிதி வழங்கிய பள்ளி மாணவன்!

ABOUT THE AUTHOR

...view details