ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் அணை பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் படகு இல்லம், சிறுவர் ரயில், கொலம்பஸ், ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பவானிசாகர் அணை பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பவானிசாகர் அணை பூங்கா மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் பூங்காவை பார்வையிட தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சுற்றுலாத் தலங்கள் ஆங்காங்கே திறக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவின்பேரில் விதிமுறைகளுக்கு உட்பட்டு டிசம்பர் 14ஆம் தேதி முதல் பவானிசாகர் அணை பூங்கா திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கலாம் என உத்தரவிட்டதை தொடர்ந்து பொதுப்பணித் துறை அலுவலர்கள் பூங்காவை சுத்தம் செய்து இன்று (டிச.14) காலை பூங்கா திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.