ஏதேனும் அதிசயம் நடந்து தனது வாழ்க்கை உச்சத்திற்கு சென்று விடாதா? மனநிம்மதி கிடைக்குமா? உள்ளிட்ட பல மனக்குமுறல்களை மனிதர்கள் ஆன்மிகத்தில் தான் பிணைத்து வைத்துள்ளனர். அப்படியான ஒன்று ஜோதிடமும் கூட. ஜோதிடம் உண்மையா? பொய்யா? என்பதை விட மனிதர்கள் அந்த நேரத்து நம்பிக்கை கீற்றாகவே அது இருக்கும் என்பது மட்டும் நிதர்சனம்.
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் மட்டுமில்லாது நகரங்களிலும் கிளி ஜோதிடம் மீது இன்னும் நம்பிக்கை உடையவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த கிளி ஜோதிடத்தில் கிடைக்கும் குறைந்தபட்ச வருவாயை நம்பி ஏராளமான ஜோதிடர்கள் வாழ்ந்து வருகின்றனர். அண்மைகாலமாக கிளியை வைத்து ஜோதிடம் செய்து வருவோர் மீது வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கு ஜோதிடர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாரம்பரியமாக கிளியை வைத்து ஜோதிடம் செய்து வரும் ஜோதிடர்களுக்கு வேறு வேலை தெரியாத நிலையில் இந்த நெருக்கடி அவர்களை வெகுவாகப் பாதித்துள்ளது. எதிர்காலத்தைக் கணித்துச் சொன்னவர்களின் எதிர்காலமே தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.