சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கோடை வெப்பம் காரணமாக வனக்குட்டைகள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. கடும் வெப்பம் காரணமாக வனவிலங்குகள் குடிநீர் தேடி மைசூர் தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்வது வாடிக்கையாகிவருகிறது. இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக ஆசனூர், அரேப்பாளையம், ஒங்கல்வாடி பகுதியில் நேற்று (மே.04) மாலை இடியுடன் கூடிய கோடை மழை பெய்தது.
தொடர்ந்து பெய்த கோடை மழையால் சாலையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இந்தக் கோடை மழை பீன்ஸ் சாகுபடிக்கு உதவும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தாளவாடி அடுத்த அருள்வாடி, மெட்டல்வாடி, மல்லன்குழி, தமிழ்புரம் பைனாபுரம் பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.