தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு!

திண்டுக்கல்: தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

By

Published : Oct 16, 2020, 6:38 AM IST

தனியார் பேருந்து
தனியார் பேருந்து

திண்டுக்கல் மாவட்டம், ராமையன்பட்டியைச் சேர்ந்தவர்கள் அணிஷ் ரீகன், ரினோ செல்வ பிரகாஷ். இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் நோக்கி நேற்று (அக்.15) சென்றனர். வத்தலகுண்டு சாலை கருப்பசாமி கோவில் அருகே வந்தபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்துவதற்காக சாலையின் வலது புறத்தில் இருசக்கர வாகனத்தைத் திருப்பினர்.

அப்போது எதிரே வந்த தனியார் பேருந்து ஓட்டுனர் இருசக்கர வாகனம் அதிவேகமாக வருவதைக் கண்டு பேருந்தை திடீரென நிறுத்தினார். இருப்பினும் அதிவேகமாக வந்த இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் முன்புறத்தில் மோதினர். இதில் தூக்கி வீசப்பட்ட அனிஷ் ரீகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த ரீனோ செல்வ பிரகாஷ், உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராசாசி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்து குறித்து தகவலறிந்த திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:‌காவலர் குடியிருப்பில் வெடி வெடித்ததால் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details