திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த சிந்தலவாடம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி துர்க்கையப்பன். இவர் தனது மனைவி விஜயலட்சுமி, மாமியார் அங்கம்மாள் ஆகியோருடன் அதே ஊரில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது திண்டுக்கல்லிலிருந்து பழனி நோக்கி அதிவேகமாக சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே துர்க்கையப்பன், அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர்.
இதில் படுகாயமடைந்த அங்கம்மாள் ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தால் ஆத்திரமடைந்த சிந்தலவாடம்பட்டி பொதுமக்கள் தனியார் பேருந்துக்கு தீவைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் பேருந்துக்கு தீவைப்பு இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.