திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் மாசிப் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த வருட மாசி பெருந்திருவிழா கடந்த 20ஆம் தேதி பூ அலங்கார மண்டகப்படியுடன் தொடங்கியது. இதையடுத்து 21ஆம் தேதி பூத்தமலர் பூ அலங்கார மண்டகப்படி பூச்சொறிதலும் நடைபெற்றது.
தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பால்குடம், மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றது. மேலும் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்களும், தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். இதில் இன்று பல ஆண்டுகளாக நடைபெற்று வரும், புகழ்பெற்ற மின் அலங்கார தேர், கோயில் வளாகத்தில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகளான மேற்குரதவீதி, பென்சனர் தெரு, கிழக்குரதவீதி மற்றும் தெற்கு ரதவீதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று, பக்தர்களுக்கு அருள் பாலித்து அதிகாலை கோயிலை வந்தடையும்.