தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 6, 2021, 6:29 AM IST

Updated : Aug 6, 2021, 4:35 PM IST

ETV Bharat / state

மனைவிக்காக ஐபிஎஸ் அவதாரம்: கம்பி எண்ணும் போலி போலீஸ்

குரூப் 1 தேர்வில் வென்று ஐபிஎஸ் அலுவலரானதாக தனது மனைவியை நம்ப வைக்க, உதவி ஆணையர் வேடமிட்டு காவலர்களை ஏமாற்றிய நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்

உதவி ஆணையராக வேடமிட்டு சிக்கிக் கொண்ட விஜயன்
உதவி ஆணையராக வேடமிட்டு சிக்கிக் கொண்ட விஜயன்

திண்டுக்கல்: சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் விஜயன். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் உள்ள கட்டப்பனைக்கு, தேனி மாவட்டம் குமுளி சோதனைச் சாவடி வழியாக சென்றார். அவரை தடுத்து நிறுத்திய சோதனைச் சாவடி காவலர்களிடம், தான் உதவி ஆணையராக பணிபுரிவதாகவும், வழக்கு விசாரணைக்காக செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கேரளாவுக்குள் நுழைந்த விஜயன், கட்டப்பனை காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் நிஷாந்தையும் சந்தித்தார். பின்னர் தனது அடையாள அட்டையை காண்பித்து, தன்னை காவல் உதவி ஆணையர் என அறிமுகம் செய்துகொண்டு, அவரிடம் சிறிதுநேரம் பேசி கொண்டிருந்தார்.

உதவி ஆணையராக வேடமிட்டு சிக்கிக் கொண்ட விஜயன்

அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு ஜீப்பில் புறப்பட தயாரானபோது, காவல் நிலையத்தை விஜயன் தனது அலைபேசியில் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

மாட்டிக்கொண்ட போலி உதவி ஆணையர்

இதனால் சந்தேகமடைந்த கட்டப்பனை காவலர்கள், விஜயனையும், அவர் பயணித்த ஜீப்பையும் புகைப்படம் எடுத்தனர். மேலும் அவருடைய அடையாள அட்டையில் இருந்த எண்ணையும் குறித்துக்கொண்டனர். விஜயனின் புகைப்படம், ஜீப் எண், அடையாள அட்டை எண் ஆகியவை தமிழ்நாடு உயர் காவல் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விவரங்கள் திரட்டப்பட்டன.

அப்போது, விஜயன் தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியவில்லை என கேரள காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து தமிழ்நாடு - கேரள எல்லையான, கம்பம்மெட்டு காவல் துறை சோதனை சாவடி காவலர்கள் உஷார்படுத்தப்பட்டனர்.

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன், போலி ஐபிஎஸ் அலுவலர் விஜயன்

இருப்பினும் அதற்குள் அங்கிருந்து தப்பிய விஜயன், தேனி மாவட்டத்துக்குள் நுழைந்துவிட்டார். இதுகுறித்து உடனடியாக தமிழ்நாடு காவல் துறையினருக்கு, கேரள காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள சோதனை சாவடி காவலர்கள், ரோந்து காவலர்கள் உஷார்படுத்தப்பட்டனர். அந்த சமயத்தில் பட்டிவீரன்பட்டி அருகே நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, காவல் துறையினரிடம் விஜயன் சிக்கியுள்ளார்.

மனைவியை ஏமாற்ற வேடம்

காவல் துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் தொழிலில் நஷ்டமடைந்த விஜயன், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை ஏமாற்றுவதற்காக குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று, காவல் உதவி ஆணையர் பணியில் இணைவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து நண்பர் ஒருவர் உதவியுடன், கார் ஒன்றை வாங்கி அதனை காவல் துறை வாகனம்போல் மாற்றியுள்ளார். பின்னர் உதவி ஆணையர் சீருடையில் காரை ஓட்டிச்சென்று மனைவியிடம் காண்பித்து நம்ப வைத்துள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன், போலி ஐபிஎஸ் விஜயன்

அதற்கு பிறகு பணிக்கு செல்வதாகக் கூறி, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி என வலம் வந்துள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ராணுவ வீரர்கள், உயர் அலுவலர்கள் உள்ளிட்டோரை சந்தித்து, புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்.

பிரபலங்களுடன் புகைப்படம்

முதலில் தனது மனைவியை ஏமாற்றுவதற்காக தொடங்கிய நாடகத்தை, பின்னர் நிரந்தர தொழிலாகவே மாற்றிவிட்டார். தான் செல்லும் பாதையில் காவலர்களிடம் விசாரணையில் ஈடுபடுவது, ஆவணங்களைச் சரிபார்ப்பது, வனப்பகுதிகளுக்கு செல்வது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

இவர் மீது சந்தேக பார்வையை சிறிது திருப்பிய காவல் துறையினரிடம், பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட படங்களை காண்பித்து, தான் ஓர் காவல் துறை உயர் அலுவலர் என நம்ப வைத்துள்ளார். இதனை உண்மை என நம்பிய காவல் துறையினரும், அவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். தற்போது அவரைக் கைது செய்துள்ள காவல் துறையினர், விஜயன் பண மோசடி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டாரா என விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:தஞ்சையில் நிலத்தகராறில் 8 பேருக்கு அரிவாள் வெட்டு

Last Updated : Aug 6, 2021, 4:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details