தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான முருகபெருமானுக்கு தனிச் சிறப்பாக மிகுந்த நாளான தைப்பூச பெருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூச விரதமே முதன்மை பெற்றதாக கருதப்படுகிறது. இதையொட்டி முருகனின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் விரதம் இருந்து அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என பக்தர்கள் முழக்கம் கோயில்கள் முழுவதும் எதிரொலித்து வருகின்றன.
காவடிகள் எடுத்தும், பாதையாத்திரை சென்றும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தி முருகபெருமானை தரிசித்து வருகின்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் தைப்பூசத் திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முன்னதாக விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று(பிப்.4) மாலை நடைபெற்றது. வள்ளி, தெய்வானையுடன் தேரில் முத்துக்குமாரசாமி எழுந்தருளிய நிலையில், பக்தர்கள் ரத வீதிகளில் தேரை வடம்பிடித்து இழுத்தனர். அதைத் தொடர்ந்து, பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பக்தர்கள் வெள்ளத்தால் பழனி கோயில் விழாக் கோலம் பூண்டது.