மதுரையின் தே. கல்லுப்பட்டி அருகே உள்ள தேவன்குறிச்சி மலைப்பகுதியில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த குகை, பாறை ஓவியம், கற்படுக்கை, பாறைக் கீறல் ஆகியவை ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத் துறை பேராசிரியராகப் பணியாற்றுபவர் து. முனீஸ்வரன். இவர் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளராகவும் செயல்படுகிறார்.
முனைவர் து. முனீஸ்வரன் பேசுவது தொடர்பான காணொலி ஆதி மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள்
இவரது தலைமையில் பேராசிரியர் லட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன், ஆய்வாளர் அனந்த குமரன், நாகபாண்டி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தேவன்குறிச்சி மலைப்பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வுசெய்தனர். அப்போது புதிய கற்காலத்தைச் சேர்ந்த நீண்ட குகை வெண்சாந்து (வெள்ளை நிறம்) ஓவியம், கற்படுக்கை, பாறைக் கீறல் ஆகியவை கண்டறியப்பட்டன.
புதிய கற்கால கண்டுபிடிப்பு குறித்து முனைவர் து. முனீஸ்வரன் பேசுகையில், "தே. கல்லுப்பட்டியானது தென் தமிழ்நாட்டிலிருந்து சேர நாட்டிற்கு முக்கிய வணிகப் பாதையாக இருந்தது.
இங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தேவன்குறிச்சி மலை உச்சியில், மிக நீண்ட வடிவமுடைய குகையில் 15 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட நுழைவு வாயில் அமைப்பும், உள்புறங்களில் செஞ்சாந்து ஓவியங்கள் அழிந்த நிலையில் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களுடன் கண்டறியப்பட்டுள்ளன.
செஞ்சாந்து, வெண்சாந்து ஓவியங்கள்
இக்குகையானது காலப்போக்கில் நீரோட்டத்தால் அழிந்த நிலையில் காணப்படுகிறது. இப்போது இக்குகை பொந்து பாறை என அழைக்கப்படுகிறது. ஆதி கால மனிதர்கள் தங்களை அச்சுறுத்தும் காட்டு மிருகங்கள், தாங்கள் கண்ட காட்சிகள் ஆகியவற்றை செஞ்சாந்து, வெண்சாந்து ஓவியங்கள், குறியீடுகளாகப் பாறைகளில் வரைந்தனர். செஞ்சாந்து ஓவியம் காலத்தால் முற்பட்டது.
வெண்சாந்து ஓவியம் என்பது வெப்பாலை என்ற மரத்திலிருந்து பால் எடுத்து, இயற்கையாகக் கிடைக்கும் சுண்ணாம்பு கல்லைத் தேய்துக் கிடைக்கும் சுண்ணாம்பு திரவம் ஆகிய இரண்டையும் கலந்து உருவாக்கப்பட்டது. இவற்றைத் தங்களது விரல்கள் மூலம் பாறையில் தீட்டியுள்ளனர். பாறை ஓவியங்கள் மூன்று கோணங்களில் வரையப்பட்டிருக்கும்.
பெரும்பாலும் விலங்கு உருவம் பக்கவாட்டு கோணத்திலும், மனித உருவம் நேர்க்கோட்டு கோணத்திலும், மீன், ஊர்வன ஆகியவை பறவை கோணத்திலும் வரையப்பட்டு இருக்கும். இப்பகுதியில் கண்டறியப்பட்ட வெண்சாந்து ஓவியத்தில் வேட்டையாடுதல், நீண்ட கழுத்து கொண்ட விலங்கு, குச்சி வடிவத்தில் மனிதன் நடனமாடும் காட்சி, குறியீடுகள் போன்றவை வரையப்பட்டுள்ளன. இதன் காலம் சுமார் மூன்றாயிரம் ஆண்டுக்கு முற்பட்டது.
இரும்பு உளியால் செதுக்கப்பட்ட பாறைக்கீறல்
மலையின் தென்மேற்குப் பகுதியில் 2 அடி அகலம், 5 அடி நீளம் கொண்ட மூன்று கற்படுக்கை நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. கற்படுக்கை அருகே மழை நீர் வழிந்தோட, குகைத்தள வாயிலின் தரைத்தளத்தில் சிறிய வாய்க்கால் போன்று வெட்டப்பட்டுள்ளது. குகையின் மேல் பகுதி சிதைந்து காணப்படுகிறது.
சிறப்பாக ஆரம்பிக்கப்பட்ட இக்குகை ஏதோ ஒரு காரணத்தால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இக்குகை பஞ்சு மெத்தை பாறை என அழைக்கப்படுகிறது. இதன் காலம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்டது எனக் கருதலாம்.
மலையின் தரைத்தளத்திலிருந்து 5 அடி உயரத்தில், 3 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட பாறைக்கீறல் ஓவியமானது முற்றிலும் இரும்பு உளியால் செதுக்கப்பட்டுள்ளது. 17, 25, 30 என்ற எண்ணிக்கை கொண்ட கோடுகள் தோரண வாயிலாக மூன்று அடுக்குகளில் வரையப்பட்டுள்ளன.
வரலாற்றின் முக்கிய மைல்கல்
பாறைக்கீறலின் இடதுபுறத்தில் மனிதனின் உருவம் கொண்ட மிருகம், தலையோடு இரண்டு உருவம் செதுக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் சரிந்த கொண்டையுடன் பெண்ணின் உருவம் வட்ட வடிவத்தில், ஆடை அணிந்து நடனமாடுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வகை பாறைக்கீறல்கள் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, பெருமுக்கல், தண்டாரம்பட்டு போன்ற குறிப்பிட்ட இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன. தேவன்குறிச்சி மலையில் கண்டறியப்பட்ட பாறைக்கீறலானது வரலாற்றின் முக்கியமான மைல்கல்லாகும்.
இப்பகுதி மத்திய தொல்லியல் துறையால் 1947, 1958, 1976ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வியல் புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள், கைக்கோடாரி, நுண்கற் கால கருவிகள், பெருங்கற்கால நினைவுச் சின்னம், முதுமக்கள் தாழி மண்பாண்டங்கள், கல்மணிகள், கிளிஞ்சல் வளையல் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன என்பது மற்றொரு சிறப்பாகும்” என்றார்.
இதையும் படிங்க:பூந்தியும், வாந்தியும்... கானா பாடகரின் ஆபாச பாடல்: பொதுமக்கள் கண்டனம்