மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. போராட்டத்தின்போது பல பகுதிகளிலும் வன்முறையும், துப்பாக்கிச் சூடும் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து மத்திய அரசு எந்த மதத்தினரும் அச்சம் கொள்ள வேண்டாம், திருத்தங்கள் குறித்து அனைவரும் கருத்து கூறலாம் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகள், ஜமாஅத்துல் உலமா சபை, அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, கண்டன பொதுக்கூட்டம் நடத்தினர்.
இப்பொதுக்கூட்டத்தில், ' மத்திய அரசு இந்திய அரசியல் சாசனத்தின் புனிதத்தைச் சீர்குலைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை பாஜக கொண்டு வந்துள்ளது. பாபர் மசூதி விவகாரத்தில் அமைதி காத்தது போல இம்முறை இருக்கமாட்டோம்' எனவும் தெரிவித்தனர்.