திண்டுக்கல்:தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பாக பல்வேறு மாவட்டங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். அதன்படி திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடக்க விழாவும் கன்னிவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் அவர் பேசும்போது, ஆத்தூர் ஒன்றியத்தில் இரண்டு அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கி இருப்பதாகவும் பள்ளிகளுக்கு செல்வது போல அனைத்து மாணவர்களும் எந்த ஒரு தடையும் இன்றி கல்லூரிக்கு செல்வதற்கு ஏதுவாக முதலமைச்சர் கல்லூரிகளை தொடங்கி வைத்து வருவதாகவும் கூறினார்.
தற்போது தொடங்கப்பட்டிருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரைவில் கட்டி முடிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும் எனவும் 300 இடங்களுக்கு 2000 விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும் பேசினார். மேலும் 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்பவர்கள் கூட எந்த ஒரு சிரமமும் இன்றி அவர்கள் பிள்ளைகள் படிப்பதற்கு ஏதுவாக கல்லூரி தொடங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.