கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவினால் அனைத்துத் தரப்பு மக்களும் வேலையின்றித் தவித்து வருகின்றனர். அன்றாடத் தேவைகளுக்குக்கூட பணமின்றி மக்கள் அரசை எதிர்பார்த்துவருகின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவினால் வேலையின்றி தவித்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் கொடைக்கானலைச் சுற்றியுள்ள காடுகளை நோக்கி தஞ்சமடைகின்றனர். கொடைக்கானலில் சுமார் 76 பழங்குடியினர் கிராமங்களில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்துவருகின்றனர்.
இவர்கள் மலைப்பகுதியில் கிடைக்கும் கடுக்காய், நெல்லிக்காய், இஞ்சி உள்ளிட்ட வனப்பொருள்களை சேகரித்து, வெளியூரில் உள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்துவந்தனர். ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொருள்களை விற்பனை செய்யமுடியாததால், அத்தியாவசிய தேவைகளுக்கும் பணமின்றி தவித்துவந்தனர்.