திண்டுக்கல்: தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்குப் பக்தர்கள் வழிபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த வெள்ளி கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று (ஜனவரி 9) வரை மூன்று நாட்களுக்குப் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வரும் 12-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதை முன்னிட்டு, பழனிக்குப் பாதயாத்திரையாக வந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லாததால் கிரிவலம் சுற்றி வந்து அடிவாரம் பாத விநாயகர் கோயிலில் சென்று சாமி கும்பிட்டு விட்டுத் திரும்பிச் சென்றனர்.