திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள காவலப்பட்டி ஊராட்சியில் உள்ள சித்தரேவு என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த உச்சி காளியம்மன் கோயிலில் அனைத்து சமுதாயத்தினரும் வழிபட்டு வந்தநிலையில், உள்ளூர் நிர்வாகப் பிரச்னை காரணமாக கோயில் பராமரிப்பின்றி, பூட்டப்பட்டு சிதிலமடைந்த நிலையில் இருந்துள்ளது.
இதன் காரணமாக சித்தரேவு பகுதியில் உள்ள குறிப்பிட்ட சமுதாயத்தினர், அதே பகுதியில் வழிபாட்டிற்காக புதிதாக உச்சிகாளியம்மன் கோயில் மற்றும் செல்வ விநாயகர் கோயிலைக்கட்டி, கடந்த மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட கோயிலில் பட்டியலின மக்களை உள்ளே விட மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பழனி-கோவை நெடுஞ்சாலையில் இன்று (மே 11) சாலைமறியல் நடைபெற்றது.
கோயிலுக்குள் அனுமதி வேண்டும்: பழைய கோயில் பூட்டப்பட்டு சிதிலமடைந்த நிலையில், குறிப்பிட்ட சமுதாயத்தினர் சார்பில் அரசு புறம்போக்கு நிலத்தில் புதியதாக கோயில் கட்டப்பட்டுள்ளது. அதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சமுதாயத்தினரை உள்ளே விட அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே, இதற்கு எதிர்ப்புத்தெரிவித்தும் அனைவரையும் சாமி கும்பிட அனுமதிக்க அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து கோயில் கட்டிய ஒரு சமுதாயத்தினர் கூறியதாவது: பழைய கோயில் சிதிலமடைந்ததால் சொந்தமாக 2 சென்ட் நிலம் வாங்கப்பட்டு, குடும்பத்திற்கு 40ஆயிரம் ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டு, எங்களது நிதிப் பங்களிப்பில், புதிதாக உச்சிகாளியம்மன் மற்றும் செல்வ விநாயகர் கோயிலைக் கட்டினோம். கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.