திண்டுக்கல்:அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக முடி காணிக்கையை செலுத்திவிட்டு பழனி முருகனை தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பழனி கோயிலுக்கு உட்பட்டு சரவணப்பொய்கை, சண்முக நதி, ஒருங்கிணைந்த முடி மண்டபம், மின் இழுவை ரயில் முடி மண்டபம், தண்டாயுதபாணி நிலைய முடி இறக்கும் இடங்கள் உள்ளிட்ட 5 இடங்கள் உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடி காணிக்கை செலுத்த கட்டணம் இல்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அப்போது முதல் முடி காணிக்கை சீட்டுக்கு கட்டணம் செலுத்தாமல் பக்தர்கள் முடி காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர்.
தற்போது முடி காணிக்கை சீட்டு வழங்கும் பணியை மெருகூட்டுவதற்காக புதிய நடைமுறையை கோயில் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. பக்தர்களின் போட்டோவுடன் இணைத்து ஆன்லைன் மூலமாக முடி காணிக்கை சீட்டு வழங்கபட்டு, பின்னர் முடி காணிக்கை செலுத்தப்பட்டு மீண்டும் இந்த சீட்டை கோயில் நிர்வாக டிக்கெட் வழங்கும் இடத்தில் கொடுத்து முடி எடுத்தவரின் போட்டோவுடன் சீட்டு வழங்கப்படுகிறது. இந்த நடைமுறைக்கு நீண்ட நேரம் தாமதமாவதால் தங்களுக்கு வேலை செய்ய நேரம் போதவில்லை என்றும், பழைய முறை சீட்டு வழங்க வேண்டும் என ஏற்கனவே மொட்டை அடிக்கும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், புதிய வகை சீட்டு மூலம் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.