தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 9, 2020, 8:11 AM IST

Updated : Dec 14, 2020, 3:52 PM IST

ETV Bharat / state

மரபு சிலம்பக்கலையை மலைகிராம குழந்தைகளிடம் கொண்டுசேர்க்கும் இளைஞர்!

சமவெளிகளான மருத நிலங்களிலிருந்து தனித்திருக்கும் மலைசூழ் குறிஞ்சி நிலங்கள், சராசரி வசதி வாய்ப்புகளைப் பெறுவதிலும் தனித்தே நிற்கின்றன. சங்க காலத்திலிருந்து தொடங்கும் இந்த நீட்சி தற்காலத்திலும் தொடர்கிறது. குறிஞ்சிக் குழந்தைகளால் எளிதில் எட்டிவிட முடியாத தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக்கலையான சிலம்பக் கலையை மலைவாழ் குழந்தைகளுக்கு கற்றுத்தருகிறார் இளைஞர் ஒருவர். அடி பிறழாமல், மூங்கில் கம்புகள் அதிரும் ஓசையை கொடைக்கானல் மலை முழுக்க அதிரச் செய்யும் வடிவேலின் கதைதான் இது.

சிலம்பக் கலையை மலைகிராமக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் இளைஞர்
சிலம்பக் கலையை மலைகிராமக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் இளைஞர்

திண்டுக்கல்: எப்போதும் பசுமை சூடியிருக்கும் மலைகள், இப்போது பனியும் போர்த்தியிருக்கிறது. உல்லன் பாதுகாப்பு இல்லாமல் பெரியவர்களே வெளியேவர தயங்கும் குளிரில், வெறும் விளையாட்டுடைகள் அணிந்து சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் சிறுவர்கள். தங்களின் வயதுக்கேற்ற வரிசையில் நிற்கும் அவர்களின் கையில், வளர்த்திக்கேற்ற வகையிலான சிலம்பக் கம்பு.

பிஞ்சு முதல் பருவக் குழந்தைகள் வரையுள்ளவர்களின் விரல்களில் லாகமாகச் சூழலும் சிலம்பக்கம்புகள், அவை காற்றை மட்டுமல்ல, குளிரையும் குழந்தைகளை அண்டவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தன. வித்தைபுரியும் குழந்தைகளின் முன்நின்று விளையாட்டின் சூட்சுமங்களைக் கற்பித்துக் கொண்டிருந்தார் சிலம்பம் ஆசிரியர் வடிவேல்.

கொடைக்கானல் அருகே, 20 கி.மீ. தள்ளியிருக்கிற பூம்பாறை கிராமத்துக்காரர் வடிவேல். மலை வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட மக்களுக்கிடையில் வளர்ந்த வடிவேல், இளங்கலை தொழில்நுட்ப (பி.டெக்.) பட்டதாரி. சிலம்பக்கலை மீது ஆர்வம் கொண்ட இவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கலையைக் கற்றுவந்தார்.

கலை கைவசமானதும் திருப்தியடையாத வடிவேலின் மனம், அடுத்து என்ன என்ற கேள்வியுடன் பயணித்தது. அனுபவம் ஒருவனை ஆசானாக்கும் என்பதற்கிணங்க, தான் கற்றறிந்த கலையை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க விரும்பியிருக்கிறார் வடிவேல். விளைவு, 'ஸ்ரீ வீரஆஞ்சநேயா சிலம்பப் பயிற்சிப் பள்ளி'.

பள்ளிப் படிப்பைத் தாண்டி, திறன்வளர பயிற்சிகளுக்கு அதிக வாய்ப்பில்லாத மலைவாழ் குழந்தைகளுக்கு சிலம்பக் கலையைப் பயிற்சிவிக்கிறது ஸ்ரீ வீரஆஞ்சநேயா சிலம்பப் பயிற்சிப் பள்ளி. போதிய விழிப்புணர்வு இல்லாததால் குறைவான மாணவர்களுடன் தொடங்கிய பயிற்சிப் பள்ளியில், தற்போது 400 பேர் பயிற்சி பெறுகின்றனர் என்கிறார் வடிவேல்.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பக்கலையில், அடி வரிசை, கோர்வை, படைவீச்சு, வாள் வீச்சு, அலங்காரச் சிலம்பம், தீப்பந்தம் என நிறைய வகைகள் இருக்கின்றன. சிலம்பம் விளையாட வயது வித்தியாசம் இல்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் விளையாடலாம். சிலம்பாட்டம் சிறந்த உடற்பயிற்சி விளையாட்டு. இந்த விளையாட்டின் உள்கூறுகள், உடலினை உறுதிசெய்யும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. இதனை விளையாடுவதால் உடல் உறுதியாகவும், மனம் அமைதியுடன், நேர்மறை எண்ணங்கள் அதிகமாகிறது என்கிறார் சிலம்பம் ஆசிரியர் வடிவேல்.

சிலம்பக்கலையை மலைகிராம குழந்தைகளிடம் கொண்டுசேர்க்கும் இளைஞர்

"நான் நாலு வருஷமா சிலம்பக்கலையை கத்துக்கிறேன். சிலம்பத்துல புலியாட்டம், வாள் கொம்பு, படைவீச்சு, தீப்பந்தம் இந்த மாதிரி நிறைய கத்துக்கிட்டு வர்றேன். சிலம்பம் விளையாடுறதாலே எனது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. என்னை மாதிரியே நிறைய பேர் இந்தக் கலையை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும். நான் எங்கே சென்றாலும் அங்குள்ள சூழ்நிலைகளை என்னால் தனியாக எதிர்கொள்ள முடிகிறது" என்கிற கோமதியின் வார்த்தைகளில் தெறிக்கிறது சிலம்பம் தந்த தைரியம்.

இளைஞராக இருந்தாலும் தேர்ந்த ஆசிரியராக இருக்கும் வடிவேல், தன் மாணவர்களின் திறமைகள் கொடைக்கானல் மலைகளில் மட்டும் தேங்கிவிட விரும்பவில்லை. அவர்களை உள்ளூர், வெளி மாவட்ட, மாநில போட்டிகளிலும் பங்கேற்க ஊக்குவித்து அழைத்துச் செல்கிறார். இப்படிப் போட்டிகளில் பங்குபெறும் மாணவ, மாணவிகள் தங்களின் திறமைகளை வெளிக்காட்டி பதக்கங்களும் சான்றிதழ்களும் பெற்றுவருகின்றனர்.

"இரண்டு வருஷமா சிலம்பம் கத்துக்கிட்டு வர்றேன். நான் சிலம்பம் கத்துக்க என் பெற்றோர் நிறைய ஒத்துழைப்புத் தர்றாங்க அதனால என்னால சிறப்பா கத்துக்க முடியுது. நாங்க நெறைய போட்டிகளுக்குப் போய் சிலம்பம் விளையாடி பரிசுகளும் வாங்கியிருக்கோம்" என நண்பர்களுக்குமான வெற்றிக் கதையை சொல்கிறார் ஹரிணி.

தாங்கள் கற்ற பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறையினருக்கு தன்னார்வத்துடன் கடத்திவரும் வடிவேல் போன்ற ஆர்வலர்களிடம் ஒர் ஆதங்கமும் இருக்கத்தான் செய்கின்றன. தமிழ்நாடு முழுவதும் என்னைப் போன்ற சிலம்ப பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். இந்தச் சிலம்பக்கலை அதிக மக்களைச் சென்று சேர, இந்தக் கலையை வளர்க்க அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள்விடுக்கிறார் வடிவேல்.

உரியவர்களின் செவிகளை எட்டட்டும் கலைஞர்களின் கோரிக்கை!

இதையும் படிங்க: அத்துமீறுகிறதா ஆதிப்பேரு உயிர் - ஆக்கிரமிக்கப்படும் யானையின் வலசை பாதைகள்!

Last Updated : Dec 14, 2020, 3:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details