தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.8 கோடியே 54 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பீட்டில் மூக்காரெட்டிப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, வெங்கடசமுத்திரம், பொம்மிடி ஆகிய 4 இடங்களில் பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் மூலம் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன், கரோனா தொற்று பாதிப்பு காரணத்தினால் தேர்வு எழுதும் சூழல் மாணவர்கள் மத்தியில் இல்லை. இதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி கல்லூரி பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கல்லூரி படிப்பில் இளங்கலை பட்டப்படிப்பில் ஆறாவது பருவத் தேர்வு, முதுகலை பட்டப்படிப்பில் நான்காவது பருவத்தேர்வு, பொறியியல் பட்டப்படிப்பில் எட்டாவது பருவத்தேர்வு ஆகியவை இறுதி தேர்வுகள் என்பதால் நீதிமன்ற உத்தரவுபடி தேர்வுகள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.