தர்மபுரிஅருகே நல்லம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட பழைய இண்டூர் அம்பேத்கர் காலனியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கியுள்ளனர். இதனையடுத்து கடந்த 2013ஆம் ஆண்டு ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு, கிராமத்தின் அருகில் சுமார் ஐந்து ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளனர்.
இந்த இடத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்த சுமார் 100 பேருக்கு பட்டா வழங்குவதற்காக அரசு நடவடிக்கை எடுத்து வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக ஏழு பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இதனை அறிந்த நிலத்தின் உரிமையாளர் வீட்டுமனைப் பட்டா வழங்க நிலம் வழங்க முடியாது என நீதிமன்றத்திற்குச் சென்று தடையாணைப் பெற்றுள்ளார். இதனால் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக பழைய இண்டூர் டாக்டர் அம்பேத்கர் நகர் மக்கள் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு, மாவட்ட ஆட்சியர், அமைச்சர், முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் மனு அளித்து வந்துள்ளனர். ஆனால் கிராம மக்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை எனத் தெரிகிறது.