தமிழ்நாடு

tamil nadu

கிராமத்தை சூழ்ந்த காய்ச்சல்: பொதுமக்கள் பீதி!

By

Published : Sep 13, 2019, 8:30 PM IST

தருமபுரி : அரூர் அருகே கடந்த இரண்டு மாதங்களாக திடீரென பரவியுள்ள காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்காக கிராமத்தில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கிராமம்

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த எம்.வெளாம்பட்டி ஊராட்சி சுண்டக்காப்பட்டியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கடந்த, ஒன்றரை மாதத்திற்கு மேலாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

மர்ம காய்ச்சலால் முடங்கியுள்ள கிராமம்.

இந்நிலையில், ஒரே குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தவுடன் அடுத்தடுத்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்குள்ளான அவர்கள் சிகிச்சைக்காக தினமும் 108 அவசர ஊர்தியை வரவழைத்து 10 முதல் 15 பேர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

ஆனால் அரூர் அரசு மருத்துவமனையில் இந்த கிராமத்திலிருந்து செல்லும் மக்களுக்கு முறையான சிகிச்சையை வழங்குவதில்லை, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அனைவரையும் அலட்சியமாக கவனிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.

இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் நூற்றுக்கணக்கானோர் வரும்பட்சத்தில் எங்களால் இந்த சிகிச்சை மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்ததாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பம்.


இந்நிலையில், இந்த கிராமத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவலறிந்து வந்த ஆட்சியர் சு.மலர்விழி நேரில் வந்து கிராமத்தை ஆய்வு செய்துள்ளார். அப்போது, உரிய சிசிச்சை அளிக்குமாறு சுகாதார துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறையின் சார்பில் மருத்துவர்கள் இந்த கிராமத்திற்கு வந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

ஒரு நாள் மட்டும் சிகிச்சை வழங்கியதோடு சுகாதாரத் துறையினர் இந்த கிராமத்திற்கு வரவில்லை. மேலும் பள்ளிகளில் முதல் பருவத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தேர்வுக்குக் கூட செல்ல முடியாத நிலையில் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

மேலும், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய சிகிச்சை வழங்க உத்தரவிட்டும்கூட, போதிய சிகிச்சை வழங்கப்படவில்லை. அதேபோல், கிராமத்தில் மருத்துவ முகாம் தொடர்ச்சியாக நடத்தவும் இல்லை என கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details