தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஒட்டர்திண்ணை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் விஜய்(23). இவர் ராஜேஸ்வரி (21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களது திருமணத்திற்கு ராஜேஸ்வரியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்து ஆறு மாதம் பிரித்து வைத்திருந்தார். ஆகஸ்டு 1ஆம் தேதி விஜய்யை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அடித்து கொலை செய்து சாலையோரம் தூக்கி வீசியுள்ளனர்.
இவ்வழக்கில் ராஜேஸ்வரியின் தந்தை முனிராஜ் உள்ளிட்ட 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தற்போது அவர்கள் சிறையில் உள்ளனர். இந்த நிலையில் கணவன் கொலை செய்யப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில் கணவன் உயிரிழந்த அதே ஞாயிற்றுக் கிழமையில், தாய் வீட்டில் இருந்துவந்த ராஜேஸ்வரி வீட்டிலயே தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மகேந்திர மங்கலம் காவல் துறையினர் ராஜேஸ்வரியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து மகேந்திரமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.