தமிழ்நாடு

tamil nadu

“திமுக ஆட்சியில் எடப்பாடியுடன் இரண்டு ‘மணி’களும் கைது” - கருப்பு கண்ணாடியில் கலக்கிய ஸ்டாலின்!

தருமபுரி: எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழவிடாமல் பாதுகாத்து வரும் தங்கமணி, வேலுமணி ஆகிய இருவரும் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதலில் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

By

Published : Nov 16, 2019, 11:47 PM IST

Published : Nov 16, 2019, 11:47 PM IST

dmk stalin

தருமபுரி மாவட்டம் வள்ளலார் திடலில் நடைபெற்ற திமுக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். எப்போதும் இல்லாத அளவிற்கு கருணாநிதி பாணியில் கூலிங் கிளாஸ் அணிந்தபடி கூட்டத்தில் பேசத்தொடங்கினார்.

பேனர் கலாசாரத்தை எதிர்த்தவன் நான்

அதில், கடந்த காலங்களில் செயல் தலைவராக இருந்த காலம் முதல், பேனர் கலாசாரமே வேண்டாம் என தெரிவித்துவந்தேன். சில மாதங்களுக்கு முன்பு சென்னையில், ஓபிஎஸ் வருகைக்கு வைத்த பேனர் விழுந்து பெண்மணி உயிரிழந்தார். அதேபோன்று கோவையில் முதலமைச்சர் வருகைக்கு வைத்த அதிமுக கொடிகம்பம் கீழே விழுந்ததில் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி கால் அகற்றப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.

கமிஷனை கேட்டால் முதலீட்டாளர்கள் வருவார்களா?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்வதால் என்ன பயன் கிடைத்துவிட்டது. இவர்கள் கேட்கும் கமிஷனை கேட்டால் முதலீட்டாளர்கள் யாரும் வரமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் மயங்கி விழுந்துவிடுகிறார்கள். மயக்கம் தெளிந்து எழுவதற்குள் வேறு மாநிலத்திற்கு சென்று விடுகிறார்கள். முதலீட்டாளர்களுக்கு மாநில அரசின் மீது நம்பிக்கையில்லை. இப்படியிருந்தால் எப்படி முதலீடு வரும். வரும் ஆனா... வராது.

இரண்டு ‘மணி’களும் கைது செய்யப்படுவார்கள் - ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டிற்கு கள்ளிப்பால் ஊற்றும் எடப்பாடி

எடப்பாடி பால் வடியும் முகம். அதனால் தான் தமிழ்நாட்டிற்கு கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்துவருகிறார். நெடுஞ்சாலைத்துறையில் பெரும் ஊழல் நடந்துள்ளது. நீதிமன்றம் முகாந்திரம் இருப்பதால்தான் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.

மக்களவைத் தேர்தல் வெற்றி

நாங்கள் பொய் சொல்லி தேர்தலில் வெற்றி பெற்றதாக பேசி வருகிறார்கள். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றி பெற வைத்த மாவட்ட மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். நான் கொடுத்த வாக்குறுதிகளை செந்தில்குமார் நன்றாகவே செய்து வருகிறார். தருமபுரி மாவட்டம் மட்டும் இல்லை, இந்தியாவுக்கே சிறந்த மக்களவை உறுப்பினராக செந்தில்குமாரை நீங்கள் தோ்ந்தெடுத்துள்ளீர்கள்.

தமிழ்நாட்டின் ஊழல் பெருச்சாலிகள்

தமிழ்நாடு அமைச்சர்களில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பவர்கள் தான் இரண்டு மணிகள். ஒன்று அமைச்சா் தங்கமணி, மற்றொருவர் அமைச்சா் வேலுமணி. இவர்களின் வேலை கல்லா கட்டுவது மட்டுமே. அதனால்தான் இவர்களை எடப்பாடி பக்கத்திலேயே வைத்துள்ளார். டெங்கு காய்ச்சலை தடுப்பதாகக் கூறி, மாதம் 100 கோடி ரூபாய் என 6,000 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர்.

எடப்பாடி ஆட்சியை காக்கும் இரண்டு மணிகள்

எடப்பாடி ஆட்சியை கவிழவிடாமல் பாதுகாத்து வருபவர்கள் தங்கமணியும், வேலுமணியும் தான். திமுக ஆட்சிக்கு வந்ததும், எடப்பாடியுடன் இந்த இரண்டு மணிகளும் தான் முதலில் சிறை செல்வார்கள்.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவினில் ஊழல் என தொடா்நது அதிமுக ஆட்சியில் உள்ள அமைச்சா்கள் இலாக்காக்களில் ஊழல் நடைபெற்று வருகிறது என்று ஸ்டாலின் மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details