தமிழ்நாடு

tamil nadu

தருமபுரியில் செறிவூட்டப்பட்ட அரிசியில் உணவுத் திருவிழா!

By

Published : Apr 3, 2023, 4:09 PM IST

செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த விழிப்புணர்வுக்காக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுத் திருவிழா நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் சாந்தி விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வண்ணம் தொடங்கி வைத்தார்.

A food festival was held at the district collector's office to raise awareness about enriched rice
செறிவூட்டப்பட்ட அரிசியில் உணவுத் திருவிழா!

செறிவூட்டப்பட்ட அரிசியில் உணவுத் திருவிழா!

தருமபுரிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவுத் திருவிழா நடைபெற்றது. செறிவூட்டப்பட்ட அரிசி பிளாஸ்டிக் அரிசி இல்லை என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த உணவுத் திருவிழாவை நடத்தினார்.

மேலும், இத்திருவிழாவைத் தொடங்கி வைத்து செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட தக்காளி சாதம், தயிர் சாதம் மற்றும் பொங்கலை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து தானும் பொதுமக்களுடன் அமர்ந்து உணவை உட்கொண்டார். இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, “செறிவூட்டப்பட்ட அரிசி, அனைத்து நியாய விலை கடைகளிலும், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், தருமபுரி மாவட்டத்தில் 1079 நியாய விலைக்கடைகளிலும் இந்த அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த அரிசியில் வைட்டமின் ஏ உள்ளிட்ட நுண்ணூட்டச் சத்துக்கள் செறிவூட்டப்பட்டு, 100 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி என்ற விகிதத்தில் கலந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விநியோகிக்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டம் இன்றியமையாத திட்டமாக உள்ளது. மேலும், தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலும் ரத்த சோகையால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த செறிவூட்டப்பட்ட அரிசி ரத்த சோகையை தடுக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். ஏனெனில், சில கிராமங்களில் செறிவூட்டப்பட்ட அரிசியை தவறாக பிளாஸ்டிக் அரிசி என மக்கள் கூறிவருகின்றனா்.

அரிசியை தண்ணீரில் ஊறவைக்கும் பொழுது சில அரிசி மேலே மிதக்கும் சாத்தியக்கூறு உள்ளது. அதனால் இது பிளாஸ்டிக் அரிசி, கலப்படம் என கிராமத்தில் தவறான புரிதல் உள்ளது. அது தவறான கருத்து, செறிவூட்டப்பட்ட அரிசி உடலுக்கு நல்லது என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த உணவுத் திருவிழா நடைபெற்றது” என மாவட்ட ஆட்சியர் சாந்தி விழாவில் பேசினார்.

இதையும் படிங்க:குடையை ரெடியா வையுங்க மக்களே.. அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details