தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 15, 2022, 10:29 AM IST

ETV Bharat / state

குடும்பத்தை கவனிக்காத தந்தையை வெட்டிக்கொன்ற மகன்கள் கைது!

தருமபுரி அருகே குடும்பத்தை சரிவர கவனிக்காத தந்தையை ஆத்திரத்தில் வெட்டிக்கொலை செய்த இரண்டு மகன்களை போலீசார் கைது செய்தனர்.

தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்த 2 மகன்கள் கைது
தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்த 2 மகன்கள் கைது

தருமபுரி:புலிகரை பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணன் (55). இவருடைய மனைவி கந்தம்மாள். இவர்களுக்கு பிரேம்குமார் (30), ரஞ்சித்குமார் (28) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் புலகரை அருகே உள்ள தோட்டத்தில் கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று கிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகத் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீசார் கூறுகையில் "கிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம், சீட்டாடும் பழக்கம் ஆகியவை இருந்துள்ளது. இதை மனைவி மற்றும் மகன்கள் கண்டித்த போது குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மனைவி கந்தம்மாளை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் மன வேதனை அடைந்த கந்தம்மாள் தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

மூத்த மகன் பிரேம்குமார் கம்மாளப்பட்டியிலும், இளைய மகன் ரஞ்சித்குமார் கோவையிலும் குடும்பத்தினருடன் வசித்து வந்தனர். இந்நிலையில் மனைவி மற்றும் மகன்கள் தன்னுடன் இல்லாததால் கிருஷ்ணன் தனது விருப்பப்படி வாழ்ந்து உள்ளார். அப்போது அவருக்கு சில பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் கந்தம்மாளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் 2 மகன்களும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு நேற்று முன்தினம் புலிகரை அருகே கிருஷ்ணன் வசித்து வந்த தோட்டத்திற்கு பிரேம்குமார், ரஞ்சித்குமார் ஆகியோர் சென்றனர். அங்கு கிருஷ்ணனிடம் குடும்பத்தை கவனிக்காமல் விட்டது குறித்து அவர்கள் 2 பேரும் கேட்டுள்ளனர்.

அப்போது தந்தைக்கும், மகன்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மகன்கள் மற்றும் அவர்களுடன் வந்த 2 பேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கிருஷ்ணனைச் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்” என்று கூறினார்.

இதையடுத்து பிரேம்குமார், ரஞ்சித் குமார் ஆகிய 2 பேரை மதிகோன்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசித் தேடி வருகிறார்கள். குடும்பத்தைக் கவனிக்காததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், தந்தையை 2 மகன்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: தருமபுரி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து!

ABOUT THE AUTHOR

...view details