மனு தர்மத்தில் இந்து பெண்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, பாஜகவினர் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் நடிகை குஷ்பூ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கும் கண்டன போராட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், விசிகவினரும் பாஜகவை கண்டித்தும், மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தியும், இன்று போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி போராட்டம் நடைபெறும் என இரண்டு கட்சியினரும் அறிவித்து இருந்ததால், வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், டிஐஜி எழிலரசன், எஸ்பி ஸ்ரீ அபிநவ் ஆகியோர் சிதம்பரத்தில் முகாமிட்டு நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினர்.