கடலூர் மஞ்சக்குப்பத்தில் அரசு உதவி பெறும் தனியார்ப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் 2017-2018ஆம் ஆண்டு கடலூர் மஞ்சக்குப்பத்தில் தனியார் பள்ளியில் படித்த, மாணவர்கள் 5 பேர் அரசு வழங்கக்கூடிய மடிக்கணினியை பள்ளிக்கு சென்று முதல்வரிடம் கேட்டுள்ளனர். இதற்கு முதல்வர் மடிக்கணினி 2017-18ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வரவில்லை என்றும் அரசு வழங்கக்கோரி உத்தரவிட்டால் வழங்குவதாகவும் கூறி அனுப்பியுள்ளார்.
பின்னர் பள்ளி வளாகத்தில் சுற்றிய 5 மாணவர்கள் சத்தமிட்டும், கூச்சலிட்டும் சென்றுள்ளனர். இதனை அங்கு பணியில் இருந்த உடற்பயிற்சி ஆசிரியர் சந்திரமோகன் வெளியே போய் சத்தமிட்டு கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியரைப் பார்த்துத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உடற்பயிற்சி ஆசிரியர் பள்ளியை விட்டு வெளியே போகச் சொல்லி மாணவனைத் தாக்கியுள்ளார்.