கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ஆசியாவின் நெற்களஞ்சியமான டெல்டாவை பாலைவனமாக்க ஏற்பாடு செய்துவிட்டு, அந்த கானல் நீரை நம்பி, நீங்கள் இந்தத் திட்டங்களை ஆதரிக்கலாம் என தமிழ்நாடு அரசு சொல்கிறது. எட்டாண்டு காலமாக இடைவிடாமல் நான் போராடி வருகிறேன். மீத்தேன் காஸ், ஷேல் காஸ், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு 324 கிணறுகளுக்கு ஒப்பந்தம் மத்திய அரசு போட்டு இருக்கிறது. 13 உயிர்களைக் காவு வாங்கிய வேதாந்தா நிறுவனத்தோடு 274 கிணறுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
உரிமத்தை ரத்து செய்ய தயாரா?
இந்த உரிமத்தை முதலில் ரத்து செய்ய தமிழக அரசு தயாரா? மீதமுள்ள கிணறுகளுக்கு ஓஎன்ஜிசி நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தையும் ரத்து செய்ய தயாரா? தமிழக மக்களை ஒன்றும் தெரியாதவர்கள் என்று ஏமாற்றக்கூடாது.
இது நம்பிக்கை துரோகம். நம்பிக்கை மோசடி. நீட் தேர்வை வேண்டாமென்று அமைச்சரவையில் முடிவுசெய்தோம். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். தமிழக அரசு நீட்தேர்வு வரவே வராது என கூறியது.
ஹைட்ரோ கார்பன்
ஆனால் நீட் தேர்வு வந்தது. ஹைட்ரோ கார்பன் திட்டம், காவிரி டெல்டா பகுதியை பாலைவனம் ஆக்கிவிடும். அதுமட்டுமில்லாமல் கடலூர் நாகை மாவட்டத்தில் பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டலம் அமைக்க 57,700 ஏக்கர் நிலத்தை 2017 ஆம் ஆண்டு ஒப்படைத்துள்ளது.
இதனை ரத்து செய்ய தயாரா இப்படி ஒப்பந்தங்கள் போட்டுவிட்டு காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக ஆக்கப் போகிறோம் என்று சொல்வது இதைவிட மக்களை ஏமாற்றுகின்ற மோசடி வேறு இருக்க முடியாது. ஆளியா கம்பெனியோடு ஐம்பதினாயிரம் கோடிக்கு பெட்ரோல் கெமிக்கல் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போட்டு இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு அமெரிக்கா சென்றபோது தமிழக முதல்வர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளதாக அந்த நாட்டு அதிபர் முதலமைச்சரை சந்தித்து விட்டுச் சென்றிருக்கிறார்.