கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக மருத்துவக் கல்லூரியை அரசு சுகாதாரத் துறையின் கீழ் கொண்டுவந்து கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி திகழும் என அறிவித்தது.
இதனை தொடர்ந்து இங்கு கட்டணமும் அரசு கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் மேலும் தற்போது கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கும் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டாம் நிலுவைத் தொகையையும் செலுத்த வேண்டாம் எனவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை எனவே நீங்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
மேலும், நிலுவை தொகையும் செலுத்த வேண்டும், இல்லையென்றால் உங்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படும் எனவும் வாய்மொழியாக மிரட்டல் விடுவதாகவும், இதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகின்றது எனவும் மாணவர்கள் கடந்த 9 நாள்களாக மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.