தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 8, 2020, 6:26 PM IST

ETV Bharat / state

'சாதிக்க நம்பிக்கை இருந்தால் போதும்' - ஆச்சரியப்படுத்தும் மாற்றுத் திறனாளி பெண்

நம் வீட்டில் சகல வசதிகள் செய்து கொடுத்தும் படிப்பில் நாட்டம் இல்லாமல் இருப்போம். ஆனால் தன் இரு கைகளை இழந்தும் தன்னம்பிக்கையை இழக்காமல், தான் கற்ற கல்வியை பிறருக்கும் கற்றுக்கொடுத்து உதாரணமாகப் பெண்ணாக விளங்குகிறார் மாற்றுத்திறனாளி பெண் ஜீவா. அவரது சாதனைகள் குறித்த சிறு தொகுப்பு தான் இது.

panruti woman teaches free Hindi classes for children
panruti woman teaches free Hindi classes for children

கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் ஜீவா. செவிலியர் படிப்பை முடித்த இவர், பண்ருட்டியில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த இவர், கடந்த 2005ஆம் மருத்துவமனை ஜெனரேட்டரில் ஏற்பட்ட விபத்தில் தன் இரண்டு கைகளையும் இழந்தார். இரண்டு வருடங்களாக மருத்துவ சிகிச்சைப் பெற்று வந்த ஜீவா, தன் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி இருந்தார்.

தொடர்ந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்க முடியாமல் வெளியே செல்ல வேண்டும், மேலும் படித்த விஷயங்களை பிறருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என எண்ணிய ஜீவா, தன் வீட்டருகே உள்ள ஹிந்தி ஆசிரியரிடம் ஹிந்தி கற்றுக் கொண்டார். ”ஹிந்தித் தேர்வு எழுத வேண்டும், உன்னால் எப்படி எழுத முடியும்?” என ஆசிரியர் கேட்டதற்கு ”என்னால் எழுத முடியும்” என தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் ஜீவா.

இதையடுத்து வீட்டில் இருந்த துணி ஒன்றை கட்டு போன்று தனது இடது கையில் கட்டிகொண்டு எழுத கற்றுக்கொண்டார். பின்னர் ஹிந்தி தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்றார். கைகளில் எழுதி அதிகம் வலி எடுக்கவே, மாற்று வழியாக கால்களில் எழுதக் கற்றுக்கொண்டார் ஜீவா.

முழுமையாக ஹிந்தி கற்றுக்கொண்ட பின், தான் பயின்ற மொழியை மற்றவர்களும் கற்க வேண்டும் என நினைத்து, தனது வீட்டின் அருகாமையில் உள்ள ஏழை மாணவ - மாணவிகளுக்கு மாலை நேரத்தில் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

ஜீவாவின் தன்னம்பிக்கை, கல்வி, சமூக அக்கறையைக் கண்ட தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், கடலூரில் உள்ள மாணவர்களுக்கும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி வகுப்பு எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். தான் கற்றுக் கொண்டதை பிறரும் கற்க எங்கும் வேண்டுமானாலும் பயணித்து சொல்லிக் கொடுப்பேன் எனக் கூறி, வாரம் முழுவதும் தன் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துவிட்டு, ஞாயிறு மாலையில் கூத்தப்பாக்கத்தில் உள்ள 40 மாணவ மாணவிகளுக்கு இலவசமாக வகுப்புகள் எடுத்து வருகிறார் ஜீவா.

ஜீவா

இதுகுறித்து பேசிய ஜீவா, தனக்கு ஏற்பட்ட விபத்தில் கைகளை இழந்தவுடன் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்ததாகவும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணி தன்னைத் தானே தயார்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் விபத்து ஏற்பட்டாலோ, பிறவியிலேயே மாற்றுத்திறனாளியாக இருந்தாலோ, கூச்சப்பட்டு வீட்டிலேயே இருக்க வேண்டாம், ஊனம் ஒரு குறை அல்ல, சாதனை படைக்க நம்பிக்கை இருந்தால் போதும் என புன்சிரிப்புடன் கூறுகிறார் ஜீவா.

இதையும் படிங்க... மரபுசார்ந்த விளையாட்டுகளை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில் ஆடு புலி ஆட்டம்

ABOUT THE AUTHOR

...view details