தமிழ்நாடு

tamil nadu

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்; பாய்ந்தது குண்டர் தடுப்பு காவல்!

By

Published : Aug 24, 2019, 6:28 AM IST

கடலூர்: தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இளைஞரைப் பிடித்து, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மணிகண்டன் (21)

இந்தாண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி காலை பண்ருட்டி – சென்னை சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகில், பண்ருட்டி செக்குமேட்டுதெருவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரின் மகன் பரணிதரன்(20) காய்கறி வாங்கச் சென்று கொண்டிருந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டம் ஜே.ஜே நகர் பகுதியைச் சேர்ந்த வெண்ணிமலை என்பவரின் மகன் மணிகண்டன் (21) என்பவர் பதிவெண் இல்லாத இருச்சக்கர வாகனத்தில் வந்து பரணிதரனை வழிமறித்துள்ளார்.

அதோடு நில்லாமல் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் சட்டைப் பையில் வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாய் பணத்தைவழிப்பறி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பரணிதரன் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அவரை கைதுசெய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

மேலும், இவர் மீது பண்ருட்டி காவல் நிலையத்தில் ஐந்து வழக்குகளும், பாண்டிச்சேரியில் மூன்று வழக்குகளும் உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இவரின் குற்றச் செய்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டுள்ளார். இதனால் மணிகண்டன் ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details