தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 31, 2019, 12:53 PM IST

ETV Bharat / state

விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை!

கடலுார்: 2016-17, 2017-18ஆம் ஆண்டுகளில் விடுபட்ட விவசாயிகளுக்கு ரூ.9.44 கோடி பயிர் காப்பீட்டுத் தொகையை அவரது வங்கி கணக்குகளில் செலுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Cuddalore collector

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்கள் கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் 2016ஆம் ஆண்டில் ரபி பருவம் முதல் கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை கடலூர் மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டுக்கு 37,320 விவசாயிகளுக்கு ரூ.147.74 கோடி இழப்பீட்டுத் தொகை நெல் (சம்பா பருவம்), உளுந்து, மணிலா, மக்காசோளம் உள்ளிட்ட பயிர்களுக்காக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுவிட்டது.

இதில் சில விவசாயிகளின் வங்கி கணக்குகளில், செயல்படாத வங்கி கணக்கு எண், இதர காரணங்களால் அவர்களின் வங்கி கணக்கில் காப்பீட்டு நிறுவனம் பயிர் காப்பீட்டு தொகை செலுத்த இயலாத சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அரசின் வழிகாட்டுதல்படி 2016-17, 2017-18இல் வங்கி கணக்கு குளறுபடியால் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு தொகையை செலுத்த மாவட்ட ஆட்சியர், வேளாண்மை இணை இயக்குநரால் இணை வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, அதில் பயிர் காப்பீட்டு நிறுவனம் மூலம் ரூ.9.80 கோடி பெறப்பட்டுள்ளது.

இதில் 2016-17ம் ஆண்டுக்கு விடுபட்ட 735 விவசாயிகளுக்கு நெல், மக்காச் சோளம், உளுந்து பயிர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.3.52 கோடியும், 2017-18 ஆண்டுக்கு விடுபட்ட 3,469 விவசாயிகளுக்கு நெல் குறுவை, சம்பா பருவத்திற்காக ரூ.5.92 கோடியும் ஆக மொத்தம் ரூ.9.44 கோடி தொகையை குமராட்சி, காட்டுமன்னார்கோயில், மேல்புவனகிரி, பரங்கிப்பேட்டை, மங்களூர், விருத்தாசலம், நல்லூர் வட்டார விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டுள்ளார்.

இதற்குரிய பட்டியல் விவரங்கள் சம்பந்தப்பட்ட வேளாண் மைய உதவி இயக்குநர், வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஒட்டி விவசாயிகள் பார்வைக்கு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை அணுகி விவரங்களை பெறலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details