கடலூர் திருப்பாதிரிபுலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி நேற்று (செப்டம்பர் 14) பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி கூறியதாவது, "நாடு முழுவதும் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல் ) செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை மூன்று சுற்றுகளாக வழங்கப்படுகிறது.
இதில் முதல் சுற்று செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் சுற்று செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலும், மூன்றாம் சுற்றாக விடுபட்ட குழந்தைகளுக்கு சிறப்பு முகாம் செப்டம்பர் 28 ஆம் தேதியன்று அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகையினால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
6 முதல் 59 மாதம் வயதுடைய குழந்தைகள், 10ல் 7 குழந்தைகள் (70 சதவீதம் ) ரத்த சோகையினால் பாதித்துள்ளனர். முக்கியமாக, கிராமப்புறங்களில் அதிக அளவிலான குழந்தைகள் பாதித்துள்ளார்கள்.