கடலூர் மாவட்டம் ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற ஒரு காரில் ஐந்து பேர் பயணம் செய்தனர். அதேபோல், சென்னை மார்க்கத்தில் இருந்து திருச்சி நோக்கி ஒருவர் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது ராமநத்தத்தை அடுத்துள்ள காந்திநகர் அருகே வந்துகொண்டிருந்தபோது திருச்சி நோக்கி சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
நேருக்கு நேர் மோதிய கார்கள் - இருவர் உயிரிழப்பு! - தேசிய நெடுஞ்சாலை
கடலூர்:ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கார் சாலையின் குறுக்கே உள்ள தடுப்பு கட்டைகள் மீது ஏறி எதிரே பாண்டிச்சேரி நோக்கி சென்ற காரின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பாண்டிச்சேரியை சேர்ந்த ரகு, முத்துக்குமார் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். அவருடன் பயணம் செய்த தினேஷ், பிரான்சிஸ், பிரபு ஆகிய மூன்று பேரும், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவரும் படுகாயமடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்களை திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ராமநத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.