பலத்த பாதுகாப்புடன் வெகு விமரிசையாக நடைபெற்ற வனபத்ரகாளியம்மன் ஆடிக் குண்டம் திருவிழா கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற அம்மன் தலங்களில் ஒன்றாக தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வன பத்ரகாளியம்மன் கோயில் இருந்து வருகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா கடந்த 18ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார பூஜைகளும் செய்யப்பட்டு வந்தன.
தொடர்ந்து நேற்று முன்தினம் குண்டம் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றுதல் நிகழ்ச்சி நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று(ஜூலை 24) காலை 8 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜைகளும், மாலை 5 மணியளவில் பொங்கல் வைத்து, திருக்குண்டம் திறத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று அதிகாலை 3 மணியளவில் பவானி ஆற்றில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சரியாக 6 மணி அளவில் தலைமை பூசாரி ரகுபதி அம்மனின் சூலத்திற்கு சிறப்புப் பூஜைகள் செய்த பின்னர், எலுமிச்சை மற்றும் பூ கட்டுகளை குண்டத்தில் உருட்டி விட்டு, அதன் பின்னர் அக்னி குண்டம் இறங்கி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் அக்னி குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டுச் சென்றனர். பின்னர் கரகம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்த வரும் பக்தர்கள் அம்மனை வழிபட்டு குண்டம் இறங்கி அருளாசி பெற்றுச்சென்றனர். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத், செயல் அலுவலரும், திருக்கோயில் உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி செய்திருந்தனர்.
காவல்துறை சார்பில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் டிஎஸ்பிக்கள் தென்னரசு, பாலாஜி, வெற்றிச்செல்வன் முன்னிலையில் 12 இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர் என சுமார் 550 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருக்கோயிலின் பல்வேறு பகுதிகள் குறிப்பாக குண்டம் இறங்குமிடம், பவானி ஆற்றில் பக்தர்கள் குளிக்கும் இடங்கள், காணிக்கை செலுத்தும் இடங்கள், நேர்த்திக்கடன் செலுத்தும் இடங்கள் எனப் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு காவல் துறை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தவாறே நிகழ்வுகள் கண்காணிக்கப்படுகின்றன. மேலும் நான்கு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோவை,திருப்பூர்,நீலகிரி,ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர் என்பதால் கடந்த ஆண்டினைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ‘இந்தியப் பிரதமராக ஒரு தமிழர் ஆள வேண்டும்’ - கோவை கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி!