கோவை நகரின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை, மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. கேரள வனப்பகுதியில் அணை அமைந்துள்ளதால் கேரள மாநில நீர் பாசனத் துறையினர் அணையின் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
சிறுவாணி அணையில் 49.50 அடி உயரத்துக்கு நீரைத் தேக்க முடியும், அணை நிரம்பும்போது பாதுகாப்பு கருதி 45 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கிவருகின்றனர். தற்போது பருவமழை பெய்துவருவதால் சிறுவாணி அணையில், கடந்த சில நாள்களாக தொடர்ச்சியாக மழை பெய்துவருகிறது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது. இதனால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் 44.61 அடியாக உள்ளது.
இதைத் தொடர்ந்து கேரள நீர்ப்பாசனத் துறை அலுவலர்கள், சிறுவாணி அணையிலிருந்து, தங்களது பகுதியை நோக்கியுள்ள மதகு வழியாகத் தண்ணீரை திறந்துவிட்டுவருகின்றனர். இதனால் சிறுவாணி அணையில் குறிப்பிட்ட அடிக்கு நீர் மட்டம் சரிந்தது.