தமிழ்நாடு

tamil nadu

நதிநீர் பங்கீட்டில் கேரளம் மீது கரிசனம் - நெல் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை

By

Published : Sep 24, 2019, 10:16 PM IST

கோவை: நதிநீர் பங்கீட்டில் கேரளம் மீது தமிழ்நாடு அரசு அலுவலர்கள் கரிசனம் காட்டியதால், நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

tamil-nadu-farmers-accusing-officers-over-water-distribution

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கூட்டம் வருவாய் கோட்டாச்சியர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விவசாயிகள் பேசிய போது, பிஏபி நதிநீர் பங்கீட்டில் ஆழியாறு அணையில் இருந்து கேரளத்திற்கு வழங்க வேண்டிய 7.25 டிஎம்சி தண்ணீரை விட கூடுதலாக வழங்கி கேரளம் மீது தமிழ்நாடு அலுவலர்கள் கரிசனம் காட்டியதால், தற்போது தமிழ்நாட்டின் ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகளுக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பரம்பிக்குளம் - ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 30.5 டிஎம்சியும் ,கேரளத்திற்கு 19.55 டிஎம்சியும் ஒப்பந்தப்படி நீர் பகிர்மானம் செய்து கொள்ளவேண்டும்.

தமிழ்நாட்டில் 4.25 லட்சம் ஏக்கர் நிலங்களும், கேரளத்தில் சித்தூர் தாலுகாவில் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பிஏபி திட்டத்தின் மூலம் பாசன வசதி பெறுகின்றன. இது தவிர, கேரளத்தில் பாலக்காடு மாவட்டம், தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் குடிநீர் தேவைகளுக்கும் நீர் ஆதாரமாக பிஏபி திட்டம் உள்ளது. இதில் ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6 ஆயிரத்து 400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 44 ஆயிரம் ஏக்கருக்கும் பாசன வசதி பெற்றுவருகிறது. கேரளத்திற்கு ஒப்பந்தப்படி கொடுக்க வேண்டிய 19.55 டிஎம்சி தண்ணீரில் சோலையாறு அணையில் இருந்து 12.3 டிஎம்சியும், ஆழியாறு அணையில் இருந்து 7.25 டிஎம்சி தண்ணீரும் பகிர்ந்து வழங்கப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதியில் இருந்து 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை கேரளத்திற்கு 7.692 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அளவீட்டின்படி, கடந்த ஆண்டு ஆழியாறு அணையில் இருந்து வழங்க வேண்டிய 7.25 டிஎம்சி தண்ணீரை விட கேரளத்திற்கு 442 மில்லியன் கன அடி தண்ணீர் கூடுதலாக வழங்கியுள்ளனர். அதேபோல் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு 2 ஆயிரத்து 440 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கவேண்டும். ஆனால், ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயிகளுக்கு முதல்போக சாகுபடிக்கு 549 மில்லியன் கன அடியும், இரண்டாம் போக சாகுபடிக்கு 951 மில்லியன் கன அடியும் என ஆயிரத்து 500 மில்லியன் கன அடி மட்டுமே என ஒப்பந்தத்தைவிட குறைவாக வழங்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு முதல் போக சாகுபடிக்கு மே 15ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் முதல் போக நெல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், வியாழக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பொள்ளாச்சி பிஏபி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களுடன் பிஏபி கண்காணிப்பு பொறியாளர் முத்துச்சாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுகுறித்து விவசாயிகள் கண்காணிப்பு பொறியாளர் முத்துச்சாமியிடம் கோரிக்கை வைத்து பேசிய போது, மே 15ஆம் தேதி இந்த ஆண்டு தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டு மாதம் காலதாமதமாகி தற்போது வரை தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் முதல் போக நெல் சாகுபடி செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால் கேரளத்திற்கு தண்ணீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் கேரளத்திற்கு ஆழியாறு அணையில் இருந்து வழங்கவேண்டிய 7.25 டிஎம்சி தண்ணீரை விட 442 மில்லியன் கன அடி தண்ணீர் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மழை இல்லை, அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளது என்று காரணங்களை கூறி தண்ணீர் திறக்கவில்லை. இந்த முறை முதல் போக சாகுபடிக்கு முதல் கட்டமாக 300 முதல் 350 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே திறக்க நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். ஆனால், தண்ணீர் திறக்கப்படவில்லை, கடந்த முறை கேரளத்திற்கு கூடுதலாக வழங்கிய 442 மில்லியன் கன அடி தண்ணீரை அணையில் இருப்பு வைத்திருந்தால், தற்போது பழைய ஆயக்கட்டுக்கு விவசாயிகளுக்கு வழங்கியிருக்கலாம். 442 மில்லியன் கன அடி கூடுதலாக வழங்கிய தண்ணீரை விட தற்போது நாங்கள் குறைவாகவே தண்ணீர் கேட்கிறோம். கேரளத்திற்கு கூடுதாக வழங்காமல் இருந்திருந்தால், எங்களுக்கு உரிய காலத்தில் தண்ணீர் வழங்கியிருக்கமுடியும். முதல் போக நெல்சாகுபடியை நாங்கள் துவங்கியிருப்போம் என்றனர்.

இதற்கு பதிலளித்து பேசிய கண்காணிப்பு பொறியாளர் முத்துச்சாமி, இந்த ஆண்டு மழைப்பொழிவு குறைந்துவிட்டதால் அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. தற்போது பிஏபி தொகுப்பு அணைகளில் பயன்படுத்தும் அளவிற்கு 500 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இருந்தபோதும், அப்பர் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் எடுக்க வாய்பிருக்கிறதா என்பதை ஆலோசித்து உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details