கோயம்புத்தூர்: மாங்கரை, தடாகம், வீரபாண்டி, பன்னிமடை ஆகிய கிராமங்கள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளன. கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள இங்கு காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளன. உணவு மற்றும் தண்ணீருக்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சாப்பிடுவதையும், தண்ணீர் தொட்டிகளில் நீர் அருந்துவதையும் வழக்கமாக வைத்துள்ளன.
அவ்வாறு யானைகள் புகும்போது தோட்ட உரிமையாளர்கள் பட்டாசு வெடித்தும், சத்தம் போட்டும் விரட்டி வருகின்றனர். ஆனால் சில சமயம் இதற்கெல்லாம் அச்சப்படாத யானைகள் அங்குள்ளவர்களை தாக்க முற்படுகின்றன. அதுமட்டுமின்றி இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் யானைகள் ஊருக்குள் சர்வ சாதாரணமாக உலா வருவதால் அவ்வப்போது மனித மிருக மோதல் ஏற்படுகிறது.
தற்போது மலை அடிவாரத்தில் உள்ள தோட்டங்களில் இரவு நேரத்தில் ஆட்கள் யாரும் தங்குவதில்லை. வீடுகளுக்குள் பொதுமக்கள் முடங்கி விடுவதால் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. யானைகளின் நடமாட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் அரங்கேற தொடங்கியுள்ளன.
யானைகள் எந்த பகுதிகளுக்கு செல்கிறதோ அந்த பகுதியை குறி வைத்து செல்லும் கும்பல் அங்குள்ள மின் மோட்டார்கள், இருசக்கர வாகனங்கள் என கிடைக்கும் பொருள்களை எல்லாம் திருடிச்சென்று விடுகின்றனர். இதனால் பொதுமக்களிடையே யானை பயம் நீங்கி திருடர்கள் பயம் ஏற்பட்டுள்ளது.
20 தோட்டங்களில் திருட்டு
இதுகுறித்து தமிழக விவசாய சங்கத்தைச் சேர்ந்த மனோகரன் கூறுகையில், "வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் தோட்டங்களை சேதப்படுத்துவதால் அங்கிருந்தவர்கள் ஊருக்குள் சென்றுவிட்டனர்.
பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதன் காரணமாக திருடர்கள் யானை வருவதை பயன்படுத்தி தோட்டத்திலுள்ள காப்பர் வயர்கள் மற்றும் மின் மோட்டார்களை திருடிச் செல்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் 20 தோட்டங்களில் இதுபோன்று திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தும் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை" என்றார்.