கோயம்புத்தூர்:கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.721 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என கடந்த ஆண்டுகள் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த சமீரன் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இதுவரை ஊதியம் உயர்த்தி வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், உடனடியாக மாவட்ட ஆட்சியர் அறிவித்த நாளொன்றுக்கு 721 ரூபாய் சம்பளத்தை வழங்க வேண்டும் எனக் கோரி கடந்த 9ஆம் தேதி முதல் வெயில் பனி கூட பாராமல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று (பிப் 10) கோவை அரசு மருத்துவமனையில் போராட்டம் நடந்து கொண்டிருந்த வேளையில், மருத்துவமனை முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாததால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காவலர்கள் வந்து தங்களை கைது செய்தாலும் கவலை இல்லை எனக் கூறி போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர்.
இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா, “கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிரிஸ்டல் என்ற ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் 9ஆம் தேதி காலையிலிருந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.