குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் பொள்ளாச்சி: கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதிக்கு கேரள வனப்பகுதியில் இருந்து வந்த சுள்ளி கொம்பன் என்கின்ற ஒற்றை காட்டு யானை கடந்த ஒரு மாதமாக ஆழியார், பட்டர்ஃபிளை பார்க், நவமலை, சின்னார்பதி உள்ளிட்ட மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் நடமாடி வருகிறது.
மேலும் பகல் நேரங்களில் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உலா வந்து, சாலையின் குறுக்கே நின்று கொண்டிருக்கிறது. இதனால், பொதுமக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர். இதனை அடுத்து வனத்துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் வாகனங்களில் சுழற்சி முறையில் ரோந்து சென்று, யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வால்பாறை செல்ல தொடர்ந்து அச்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு நவமலை மின்வாரிய குடியிருப்பு அருகே புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த மின்வாரிய ஊழியர்கள் அருள்ராஜ் மற்றும் தியாகராஜன் ஆகியோர்களின் இரண்டு கார்களை சேதப்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து அப்பகுதியில் வாழும் மக்கள் யானையை பிடித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நவமலைக்கு சென்ற அரசுப்பேருந்தை வழிமறித்து பேருந்து ஓட்டுநருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து நவமலைக்கு இரவு 10 மணிக்கு செல்லும் கடைசி பேருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மனநலம் பாதித்த பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம்; பெங்களூர் விரைந்த தனிப்படை போலீசார்