கோயம்புத்தூர்: உக்கடம் புல்லுக்காடு பகுதியில் மாநகராட்சியின் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த நிலையத்தில் முறையாகப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில்லை எனவும், இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, பல்வேறு நோய்கள், உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறி அப்பகுதியில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
பொதுவாக, மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் மனு அளிப்பதற்கு அதிகபட்சம் ஒரு மனுவிற்கு மூன்று அல்லது ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்ததால் காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். ஆனால் தங்கள் அனைவரையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் எனக் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
அதன் பின்னர், காவல் துறையினரின் சமரச பேச்சு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, குறிப்பிட்ட நபர்கள் மட்டும் மனு அளிப்பதற்குச் சென்றனர். இதனிடையே மனு அளிக்க வந்த பெண்கள் அப்பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளைக் கையில் ஏந்தியபடி, கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் முறையாகப் பராமரிக்கப்படாததாலும், குப்பைகள் அகற்றப்படாததாலும் குழந்தைகள் முதியவர்களுக்கு ஏற்படும் நோய்கள், உடல் உபாதைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இதையும் படிங்க:கனிமங்கள் எடுப்பதற்கான டெண்டர் அறிவிப்பு; “மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படுகிறது” - துரை வைகோ குற்றச்சாட்டு!