தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 16, 2023, 7:07 PM IST

ETV Bharat / state

'#வானதிஎங்கே_வளர்ச்சிஎங்கே' - கோவையில் மநீம கட்சி ஆர்ப்பாட்டம்!

கோவை தெற்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசனை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம்

கோயம்புத்தூர்மாவட்டம், உக்கடம் பகுதியில் தெற்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசனை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மநீம மாநில இளைஞரணிச் செயலாளர் சிநேகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும், வானதி சீனிவாசனைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிநேகன், ''கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளார். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மநீம சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இது தொடக்கம் தான், தொடர்ந்து அவர்கள் களப்பணியைத் தொடங்கவில்லை என்றால், அடுத்தகட்டப் போராட்டத்தில் ஈடுபடுவோம். இதேபோல தமிழ்நாடு முழுவதும் தேர்தல் வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதைக் கண்டறிந்து அங்கெல்லாம் விழிப்புணர்வு பேரணி, போராட்டங்கள் நடத்துவோம்.

கமல்ஹாசன் போட்டியிட்ட தொகுதி என்பதால் மட்டும் இங்கு போராட்டம் தொடங்கவில்லை, தேர்தல் நேரத்தில் உற்று கவனிக்கப்பட்ட ஒரு தொகுதி என்பதால் தொடங்கப்பட்டுள்ளோம். கமல்ஹாசன் கோவையில் போட்டியிடுவாரா? கூட்டணி உள்ளதா? என்பது குறித்து முடிவு எடுக்க இன்னும் காலம் உள்ளது. கூடிய விரைவில் அறிவிக்கிறோம். யாராக இருந்தாலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அது தான் ஜனநாயகம். இது குறித்து கேள்வி கேட்கும் அரசியல் கட்சியாக மநீம தற்போது போராட்டங்களை தொடங்கியுள்ளது'' என்றார்.

தொடர்ந்து, ஓட்டுநர் சர்மிளாவிற்கு கார் வழங்கிய சர்ச்சை குறித்த கேள்விக்கு, ''நாங்கள் செய்வதை எல்லாம் கூறுவது இல்லை, இவர் இணையத்தில் கவனிக்கப்பட்டதால் வெளியே வந்துள்ளது. அண்மையில் சேலம் பெண்ணிற்கு 3 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளோம். தனி மனிதனாக எல்லாவற்றையும் செய்ய முடியாது. ஆனால், அதிகாரம் இல்லாமல் சொந்த செலவில் பல்வேறு நலத்திட்டம் செய்துள்ளோம். தேவைப்பட்டால் காலம் வரும் போது விரைவில் நீண்ட பட்டியல் வெளியிடுகிறோம். கட்சிக்காரர்களுக்கு மட்டுமே உதவும் அரசியல்வாதிகள் நாங்கள் இல்லை'' என்றார்.

மேலும், ''விலைவாசி உயர்வு கண்டிக்கத்தக்க விஷயம், கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். தக்காளி விலை அதிகரித்து ரேசன் கடைகளில் கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம். அதற்கான நிர்வாகத்தை சீர்படுத்த வேண்டும், விலையைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். தற்போதைய அரசு நாங்கள் வைத்த கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றனர். அதனை நாங்கள் பாராட்டுகிறோம். திமுக மட்டுமல்லாமல் கோரிக்கைகள் செயல்படுத்தும்போது எந்த அரசாக இருந்தாலும் பாராட்டுவோம்'' எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் வானதி எங்கே, வளர்ச்சி எங்கே என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

இதையும் படிங்க:கருணாநிதிக்கு சொந்த செலவில் நினைவுச் சின்னங்கள் வைத்துக்கொள்ளட்டும் - ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details