கோயம்புத்தூர்:அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கார்பன் சமநிலை குறித்தான கருத்தரங்கு நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 29) நடைபெற்றது. ‘கார்பன் நியூட்ரல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர் மெய்யநாதன், “காலநிலை மாற்ற பாதிப்புகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
நவீன தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி உள்ள மாவட்டமாக கோவை வளர்ந்து வருகிறது. இந்தியாவில் காலநிலை மாற்றத்தினால் அதிக பாதிப்பு உள்ள இரண்டு மாநிலம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியம், போக்குவரத்து மற்றும் தொழில்துறைதான் கார்பன்களை அதிக அளவில் வெளியிடுகின்றன.
கார்பன் வெளியேற்றத்தில் அதிக அளவில் வெளியிடும் நாடுகள், சீனா மற்றும் அமெரிக்கா. நாம் (இந்தியா) 5வது இடத்தில் இருக்கிறோம். கார்பன் சமநிலை என்ற இலக்கை எளிதில் அடைய முடியாது. எங்கள் ஊரில் வெப்பம் 105 டிகிரியை எட்டி உள்ளது. எனது வாழ்நாளில் இவ்வளவு வெப்பத்தை இதற்கு முன் பார்த்ததில்லை.
ஆண்டுக்கு 10 கோடி மரங்களை நடவு செய்ய இலக்கு வைத்துள்ளோம். ராமேஸ்வரம் மற்றும் ராஜபாளையம் ஆகிய இரண்டு நகராட்சிகள் கார்பன் இலக்கை எட்ட திட்டங்கள் தொடங்கி உள்ளோம். கன்னியாகுமரி மாவட்டத்திலும் அடுத்த பணிகளை தொடங்க உள்ளோம்.
மேலும், டெல்டா மண்டலமான 5 மாவட்டங்களில் கார்பன் வெளியேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். கோவையில் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பயோ மெட்ரிக் முறைகளை கையாளுவதால் விரைவில் இரண்டு ஏக்கர் நிலம் மீட்கப்படும். இளைஞர்கள் நீர் நிலைகள் பாதுகாப்பது குறித்து செயல்பட்டு வருவது மகிழ்ச்சி. அந்த இளைஞர்களை பாராட்ட 100 பேருக்கு, தலா ஒரு லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாய் வரை பரிசு அளிக்க உள்ளோம்.
மேலும், எங்காவது பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது. அந்த கோபம் ஒவ்வொரு மனிதருக்கும் வர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் மற்ற உயிர்களைப் பாதிக்கும் நிலையை உருவாக்கி வருகிறது. ‘மீண்டும் மஞ்சப்பை’ என்பது அற்புதமான திட்டம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து கார்பன் சமநிலை குறித்த புத்தகத்தை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், “2050ஆம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலை என்ற அடிப்படையில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.