கோவை மாவட்டத்தை ஒட்டிய கேரள மக்களால் புல்டோசர் என அழைக்கப்படும் மக்னா யானை கடந்த மாதம் வாயில் காயத்துடன் இருப்பது தெரியவந்தது. தமிழ்நாடு, கேரளா வனப்பகுதிகளில் அந்த யானை மாறிமாறி இடம்பெயர்ந்து வந்ததால் சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து கேரளாவில் மக்னா யானைக்கு வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்தனர், அப்போது யானையின் நாக்கு சேதமடைந்து இருப்பது தெரியவந்தது. மேலும் அவுட்டுக்காய் எனும் நாட்டு வெடிகுண்டை கடித்ததால் யானைக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் தமிழ்நாடு வனப்பகுதிக்குள் யானை வந்ததையடுத்து, மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு கோவை வனத் துறையினர் கண்காணித்துவந்தனர். யானையின் நாக்கு 80 விழுக்காடு அறுபட்டு சேதம் அடைந்திருந்ததால், அந்த யானையால் சாப்பிடவோ, குணப்படுத்தவோ இயலாதநிலை இருந்தது. இதனால் யானைக்கு வனத் துறையினர் சிகிச்சையளிக்க முன்வரவில்லை.
இருப்பினும் வனத் துறையினரால் வைக்கப்பட்ட மருந்து கலந்த உணவை யானை எடுத்துக் கொண்டது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆனைக்கட்டி வனப்பகுதி வழியாக, மக்னா யானை கேரள வனப்பகுதிக்குள் சென்றது. நேற்று (செப்.8) சோலையூர் அருகே மரப்பாலம் என்ற இடத்தில் நகர முடியாமல் நின்று கொண்டிருந்த அந்த யானை, மாலை படுத்துவிட்ட நிலையில், இன்று காலையில் மக்னா யானை உடல் நலக்குறைவினால் பரிதாபமாக உயிரிழந்தது.
இதையடுத்து கேரள வனத் துறையினர் யானையின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வு செய்யத் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து காட்டு யானைகள் உயிரிழந்துவருவது வன ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.