கோவை அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் காவல் துறை இயக்குநர் திரிபாதி தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சமீபகாலமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை அருகே உள்ள கேரள மாநிலமான பாலக்காடு மாவட்டத்தில் காவல் துறையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும் அக்குழுவிலிருந்த மூன்று மாவோயிஸ்டுகள் தப்பிச்சென்றனர். இதையடுத்து தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தினர். அதேபோல மலை கிராமங்களில் வசித்துவரும் பழங்குடியின மக்களுக்கு மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்தால் காவல் துறையினருக்குத் தகவல் தரும்படி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.